பக்கங்கள்

திங்கள், 16 அக்டோபர், 2017

‘ஜோதிடம்’ பற்றி ‘நாடகத் தந்தை’ சம்பந்த முதலியார்.

தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று போற்றப்படுபவர் பம்மல்.சம்பந்த முதலியார்; நீதிபதி, நாடக ஆசிரியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர். இவர், தம் சுயசரிதையில்[‘என் சுயசரிதை’, முதல் பதிப்பு 2007, தையல் வெளியீடு, சென்னை] ஜோதிடர்களுக்கும் அதனை நம்புவோர்க்கும் அதிர்ச்சி தரும் தம் வாழ்க்கை அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். படியுங்கள்.
#என் தகப்பனாரைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர் பிறந்தது 1830 ஆம் வருஷம் மார்ச் மாதம் 1ஆம் தேதி ரோகிணி நட்சத்திரம். ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவரது அம்மானுக்கு ஏதாவது கெடுதி நேரிடும் என்று சுற்றத்தார் எல்லோரும் பயந்தார்களாம். ஆனால், அப்படி ஏதும் கெடுதி நேரவில்லை. என் தகப்பனார் கூறியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதைக் கவனிப்பார்களாக.  

என் தகப்பனார் தம் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் பெண் தேடினார். அவருக்கு வயது முப்பது ஆனபடியால் இரண்டாம் தாரம் கொஞ்சம் வயதான பெண்ணாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்.

என் தாயாருக்கு அப்போது வயது இருபது. அன்றியும் கொஞ்சம் சிவப்பாயிருப்பார்கள். அவரையே என் தகப்பனாருக்கு மணம் முடிப்பதாக நிச்சயித்தார்கள்.

அக்கால வழக்கின்படி, இருவருடைய ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு பிரபல ஜோஸ்யர்களிடம் காட்டியபோது, அவர்கள் எல்லோரும் ‘பெண் ஜாதகத்தின்படி வயிற்றுப் பொருத்தமும் இல்லை; கழுத்துப் பொருத்தமும் இல்லை’ என்று கூறினார்களாம். அதாவது, குழந்தைகள் பிறக்காது; அமங்கலியாய்ப் போய்விடுவாள் என்று அர்த்தம். 

என் தந்தையாரோ, பிடிவாதமாய் என் தாயாரை மணந்தார்.

ஜோஸ்யர்கள் கூறியதற்கு விரோதமாக என் தாயாருக்கு நான்கு பிள்ளைகளும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். வயிற்றுப் பொருத்தம் இல்லையென்று ஜோஸ்யர்கள் சொன்னது பொய்த்துப்போனது.

கழுத்துப் பொருத்தம் பற்றிக் கவனிக்குங்கால்,  என் தாயார் அமங்கலி ஆகவில்லை. என் தகப்பனாருக்கு 1890 ஆம் வருஷம் சஷ்டி பூர்த்தி ஆனபோது ஒரு மாங்கலியத்திற்கு இரண்டு மாங்கலியங்களாகப் பெற்ற பிறகே இறந்தார்கள்.

யாராவது என் தகப்பனாரிடம் ஜாதகங்களைப் பற்றிப் பேச வந்தால் இந்தக் கதையை அவர் அவர்களுக்குப் பல முறை கூறியதை நான் நேராகக் கேட்டிருக்கிறேன். ஜோஸ்யத்திலும் ஜாதகத்திலும் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம் ஆகும்#

நம்மை ஒத்த சாமானியர்கள் ‘ஜோதிடம் பொய்’ என்று சொன்னால் நம் மக்கள் நம்ப மாட்டார்கள். பம்மல்.சம்பந்த முதலியார் போன்ற பெரியவர்கள்/அறிஞர்கள் சொன்னதை அறிந்த பின்னரேனும் நம்புவார்கள்தானே?!
=====================================================================================